சென்னையில் வெள்ள அபாயத்தை குறைக்கும் ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை- மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.
சென்னையில் வெள்ள அபாயத்தை குறைக்கும் ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை- மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
Published on

சென்னை:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அக்குழுவினர் சென்னை பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை ஆலோசனைக் குழுத் தலைவர் வெ.திருப்புகழ் சமர்ப்பித்து, அறிக்கையின் விவரங்களை எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க, அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன் பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. நானும், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்த நிலையில் வெள்ளத் தடுப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்தன. அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.

அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் கமிட்டியின் செயல்பாடுகள். இதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்திட்ட திருப்புகழ், குழுவின் உறுப்பினர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

முதலமைச்சர் என்ற முறையில் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய அரசு உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் நீங்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், சென்னை வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com