search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்மாழ்வார் நினைவு தினம்- ஒரே நாளில் 1.94 லட்சம் மரக்கன்றுகள் நட்டு விவசாயிகள் சாதனை
    X

    நம்மாழ்வார் நினைவு தினம்- ஒரே நாளில் 1.94 லட்சம் மரக்கன்றுகள் நட்டு விவசாயிகள் சாதனை

    • மரங்களால் நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்.
    • ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்.

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினமான இன்று (டிச.30) "காவேரி கூக்குரல்" இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்.

    மொத்தம் 88 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 736 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் இம்மரங்களை நடவு செய்துள்ளனர்.

    நம்மாழ்வார் இயற்கை விவசாயம், மர வளர்ப்பு மற்றும் மண் வள பாதுகாப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர். அவரின் சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் எண்ணற்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

    நம்மாழ்வார் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் அவரது வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

    நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு வகையில் அவரை நினைவு கூர்கிறார்கள். அந்த வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடவு செய்து நம்மாழ்வாரின் சேவையை நினைவு கூர்ந்து வருகிறது.

    டிம்பர் மரங்களை நடுவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பாகவும் உள்ளதால், காவேரி கூக்குரல் விவசாயிகளை டிம்பர் மரங்களை சாகுபடி செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வரப்போரங்களில் அல்லது வேலியோரங்களில் மரம் வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

    தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற நல்ல விலை கிடைக்கக்கூடிய டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது.

    கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தரமான டிம்பர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாற்றுகள் தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மரக்கன்றுகளை வாங்கி நடத்து வைக்கலாம்.

    மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் 80009 80009 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    Next Story
    ×