வட்டமலை அணையில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி 10,008 தீபம் ஏற்றிய விவசாயிகள்

6-வது ஆண்டாக அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர். ஓடையில் வரும் மழை நீரை நம்பி 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
வட்டமலை அணையில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி 10,008 தீபம் ஏற்றிய விவசாயிகள்
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 24.75 அடி கொள்ளளவு கொண்ட வட்டமலை அணை உள்ளது. போதிய நீர்வரத்து இல்லாத இடத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கு நிரந்தரமாக நீர் வழங்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து 6-வது ஆண்டாக விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர். மொத்தம் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் இரண்டு கால்வாய்கள் மூலம் 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஓடையில் வரும் மழை நீரை நம்பி அணை கட்டப்பட்டதால் கடந்த 43 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அணை பகுதியில் வளர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து வெட்ட வேண்டும். அணையை அசுத்தப்படுத்தி அருகில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com