இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்

பசுமை போர்வைக்கான இயக்கத்திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புறசூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர்சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்"- செயல்படுத்தப்படுகிறது.

இவ்வியக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செம்மரம், மகாகனி, ரோஸ்வுட், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, புளியன், கடம்பு, வாகை உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

அதற்கான மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இம்மரக்கன்றுகள் வரப்பு ஓரங்களிலும், வயல் முழுவதும் நடவு செய்யலாம். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல், தோட்டக்கலை விரிவாக்க மைய நாற்றாங்காலில் இருந்து பெற்று நடவு செய்துகொள்ளலாம். முன் உரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதால் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com