search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு
    X

    செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு

    • சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என தெரிவித்தது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவருக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவியின் மனுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன் சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. சம்மனை பெற செந்தில் பாலாஜி மறுத்தார்; அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்.

    விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக செந்தில் பாலாஜியை கைது செய்யவில்லை.

    செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

    ஜூன் 13ல் நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்தார்; அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சியங்களை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்திற்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×