என் மலர்
உள்ளூர் செய்திகள்

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர் தேர்வுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
- காலி பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
- மே 1-ந் தேதியை கருப்பு நாளாக அறிவிக்கலாம்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில், 700 ஓட்டுனர்களையும், 500 நடத்துனர்களையும் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து விலைப்புள்ளிகளும், தொழில்நுட்பப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன.
அதாவது, மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாநகரப் போக்குவரத்துக் கழகமே தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மனிதவள நிறுவனம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் பயன்படுத்திக் கொள்ளும்.
அவர்களுக்கான ஊதியத்தை நிரந்தர பணியாளர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கும் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும். இது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது.
தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும். இந்த முறையை கைவிட்டு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்'' என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






