search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றி பெறும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    பொதுக்கூட்டத்தில் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றி பெறும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேச்சு

    • நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நடை பெற்று ஓராண்டு நிறை வானதையொட்டி நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்பின் களக்காடு காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராகுல் காந்தி ஒரு ராஜகுமாரன் அவருக்கு எந்த குறையுமே இல்லை. எல்லா வசதிகளும் உள்ளது. அப்படிப்பட்ட அவர் இந்திய மக்களுக்காக அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும், பாராளு மன்றத்தில் அதானிக்கும், மோடிக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டதற்காகவும் அவருடைய எம்.பி. பதவியை பறித்து வீட்டை காலி பண்ண சொன்னார்கள். அப்படி இருந்தும் அந்த சோதனைகள் எல்லாம் தாண்டி மீண்டும் ராகுல் காந்தி எம்.பி. ஆனார். அத்தகைய தலைவர் நமக்காக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். அதை நினைவு கூறும் வகையில் இன்று நாமும் நடந்தோம்.

    மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி யோசிக்காமல் அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தான் இந்தியா பின்னோக்கி செல்கிறது. மக்கள் விலைவாசி உயர்வாலும், வேலை இல்லாமலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையெல்லாம் பார்த்துதான் ராகுல் காந்தி மக்களின் நலனுக்காக ஒரு இந்திய ஒற்றுமை நடை பயணத்தை செய்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணியை அமைக்க காரணமானார். பரம்பரை பணக்காரரான ராகுல் காந்தி இந்திய மக்களின் நலனுக்காக கஷ்டப்படுகிறார். அவர் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய பதவி ஆகும் அதையே அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு கூட அவர் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

    பணக்காரர் பணக்காரர் ஆகி கொண்டே செல்கிறார்கள். ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையிலே இருக்கிறார்கள். சாதியாலும், மதத்தாலும், மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். இதை யெல்லாம் மாற்ற நினைத்த ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் அனைத்து மக்களையும், அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து காட்டினார். அவர் முயற்சியால் ஒன்றிணைந்த கூட்டணி கட்சி தான் இந்தியா.

    இந்தியா கூட்டணி கட்சி பார்த்ததும் மோடிக்கு பயம் வந்துவிட்டது. எனவே தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மக்களை குழப்பம் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் என்ன முயற்சி செய்தாலும் ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி. நான் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். அங்கே எல்லாம் மக்களின் நிலைமை பின்னோக்கி செல்லுகிறது. தேர்தலில் மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்ப மாகிவிட்டது. தமிழகத்தில் ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்ததால் நம் மாநிலம் மட்டும் தப்பித்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் என்ன திட்டங்களை மக்களின் நலனுக்காக கொண்டு வந்தாரோ அதை பின்பற்றியே பல திட்டங்களை நம்முடைய முதல்-அமைச்சர் மக்களின் நலனுக்காக கொண்டு வந்து கொண்டி ருக்கிறார். வரப்போகும் தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க. அரசு பெரிய தோல்வியை சந்திக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். கண்டிப்பாக ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வட்டார, நகரங்களில் உள்ள சுமார் 1500 - க்கும் மேற்பட்ட காங்கிரசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், செல்லப்பாண்டி, ராஜகோபால் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் நம்பிதுரை, காமராஜ், மலையடிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், களக்காடு நகரத் தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×