search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலாந்துறையில் 9-ம் வகுப்பு மாணவர் மண்டை உடைந்தது
    X

    ஆலாந்துறையில் 9-ம் வகுப்பு மாணவர் மண்டை உடைந்தது

    • வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் சினிமா பாடல் பாடி அதற்கேற்ப பெஞ்சில் தாளம் தட்டி விளையாடி உள்ளனர்.
    • மாணவர்களின் சத்தத்தை கேட்டு வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

    கோவை :

    கோவை அருகே ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் சினிமா பாடல் பாடி அதற்கேற்ப பெஞ்சில் தாளம் தட்டி விளையாடி உள்ளனர்.

    இரு தரப்பாக பிரிந்துகொண்டு போட்டி போட்டுக் கொண்டு பாடல் பாடி டெஸ்கில் தாளம் தட்டி விளையாடினர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வகுப்பறைக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பூலுவபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சாரதி (14) என்ற மாணவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மாணவர்களின் சத்தத்தை கேட்டு வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் மாணவர்களை கட்டுப்படுத்தினர்.காயம் அடைந்த மாணவரை மீட்டு உடனடியாக பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியின் வெளியே மாணவர்கள் இரு தரப்பாக மோதி கொண்டனர். அதனை வேடிக்கை பார்த்த மாணவர் ஒருவர் கழுத்தில் கத்திபட்டு பரிதாபமாக இறந்தார். இதில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அதே பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×