தஞ்சை அரசு கல்லூரியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானிக்கு பாராட்டு பிளக்ஸ் போர்டு

சங்கரன் என்பவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்த மாணவர். இஸ்ரோ விஞ்ஞானியான சங்கரனை பாராட்டி பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி சங்கரனை பாராட்டி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டை பார்வையிடும் மாணவிகள்.
இஸ்ரோ விஞ்ஞானி சங்கரனை பாராட்டி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டை பார்வையிடும் மாணவிகள்.
Published on

தஞ்சாவூர்:

சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் அதன் லேண்டரை வெற்றிகரமாக இறக்கி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், உலக நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி குழுவில் இடம் பெற்றிருந்த சங்கரன் என்பவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கடந்த 1983 -ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

இதனை தொடர்ந்து சரபோஜி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரனை பாராட்டி அவரது படத்துடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் விஞ்ஞானி சங்கரன் மற்றும் சந்திரயான்- 3 வெற்றி விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்தி பெருமிதம் கொள்கிறோம் . இங்கனம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிளக்ஸ் போர்டை கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து நாமும் சங்கரனை போல் விஞ்ஞானியாக மாறி இந்தியாவுக்கு பல்வேறு புகழை தேடி தர வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com