search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கை நதியை போல தாமிரபரணியை மாற்றுவதற்கு தனி பட்ஜெட் வேண்டும்- பாளையில் அண்ணாமலை பேச்சு

    • பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது.
    • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்திற்கு வந்த பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாளையில் தனது நடை பயணத்தை தொடங்கினார். நடை பயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    வற்றாத ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணி குறித்து மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது. தற்போது அந்த நதி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய தி.மு.க ஆட்சியில் தாமிர பரணி ஆற்றை அசுத்தமாக்கி விட்டார்கள். பசுமை தீர்ப்பாயத்திற்கு சமீபத்தில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் உடனடியாக தாமிரபரணி நதியை செய்ய அறிவுறுத்தியுள்ளது. கங்கை நதியை போல தாமிரபரணி நதியை மாற்றுவதற்கு தனி பட்ஜெட்போட வேண்டும்.

    வ.உ.சி.மைதான மேற்கூரை

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரின் மத்தியில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை கட்டி முடித்து 8 மாதத்தில் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து விட்டது.

    மத்திய அரசு கொடுத்த நிதியை எந்த திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை யோசிக்காமல் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு கமிஷன் எடுக்கலாம் என்பதையே தி.மு.க. அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது. அதையே தனது முதல் கடமையாக இந்த அரசு கொண்டுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி திட்ட பணிகளுக்காக வழங்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு தமிழகத்தில் ஒவ்வொரு இணைப்புக்கும் தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கமிஷன் கேட்கிறார்கள்.

    நெல்லை மாநகராட்சி யில் ஆளுங்கட்சியை சேர்ந்த 40 கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேயர் சரவணன் எந்த பணி என்றாலும் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.

    அப்பொழுதுதான் கையெழுத்து விடுவேன் என்று கூறுகிறார் என தி.மு.க. கவுன்சிலர்களே முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை என்று கூறினால் இங்கு உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் யாரேனும் ஒருவராவது இன்று மாலைக்குள் என்னிடம் வந்து கேள்வி கேட்கலாம். ஆதாரத்தோடு நிரூபிக்க தயாராக உள்ளேன்.

    மதுவால் தமிழகம் சீரழிகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்தார். அவை எல்லாம் ஊசி போன வடை ஆகிவிட்டது.

    தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் 27 மாதத்தில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவரை அமைச்சரவையில் இருந்து மாற்றம் செய்தனர். கடந்த 4 மாதங்களாக அவரை எங்கேயும் பார்க்க முடிய வில்லை. இவற்றை எல்லாம் ஆதாரமாக கொண்டே தி.மு.க. ஆட்சி ஊழலானது என்று நிரூபித்து விடலாம்.

    2014-ம் ஆண்டு வரை விவசாயிகள் வட மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட நிலை இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சி வந்த பின்னர் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. 4 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை இருந்த நிலையில், மோடி ஆட்சிக்குப் பின்னர் 24 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்பட்டுள்ளது.

    குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1310 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு குண்டாலுக்கு ரூ.2183 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கி வருகிறது.

    கடந்த ஆட்சியில் அதிக கடன் வாங்கிய இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது முதல் இடத்துக்கு கொண்டு வந்த பெருமை தி.மு.க. அரசை சேரும். தற்போது தமிழகத்தின் மொத்த கடனாக ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி உள்ளது. அதில் நாம் ஒவ்வொருவர் குடும்பத்தின் மீதும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையின் இந்த நடை பயணத்தை ஒட்டி கலந்து கொள்வதற்காக வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் மண்டல தலைவர் குரு கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு அவர்கள் வழங்கினர். மேலும் அங்கு தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×