கழிவுநீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை பலி

வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது.
கழிவுநீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை பலி
Published on

அரவேணு,

கோத்தகிரி பழைய உழவர் சந்தை வளாகத்திற்கு அருகே தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் பின்புறம் நேற்று அதிகாலை மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறியது. அப்போது அதன் எடை தாங்கமல் தொட்டியின் மேல் மூடி உடைந்து விழுந்தது. இதில் கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்ததுடன், வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி தவித்த காட்டெருமையை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காட்டெருமை சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் ராஜனும் வரவழைக்கப்பட்டார். ஆனால், குறுகிய தொட்டிக்குள் சிக்கி இருந்ததால், மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் காட்டெருமை உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 4 வயதான ஆண் காட்டெருமை என கூறினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com