100 கோடி நில மோசடி வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 7 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை
100 கோடி நில மோசடி வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 7 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

கரூர்:

கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.

இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com