

பழனி நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பழனியில் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மருதராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஆன்மிகதலமான பழனியை திருப்பதிபோல் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வைகைசெல்வன் பேசுகையில், தமிழகத்தில் நடிகர்கள் கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினரே, எங்கள் குடும்பத்தில் முறையான குடியுரிமை எனக்கு இல்லை என்று கூறுகிறார், ஆனால் ஸ்டாலினோ குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார்.
மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், சுப்புரத்தினம், ஆவின்தலைவர் செல்லசாமி, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.