

சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடராஜன் நல்ல நிலையில் உள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
என்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். தேச துரோக வழக்கு போடும் அளவிற்கு எந்த புகாரும் இல்லை. தேச துரோக வழக்கை வலிமையாக எதிர்கொள்வேன், முன் ஜாமீன் கேட்க மாட்டேன். வழக்கை பதிவு செய்தவர்கள் மீதும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடர்வேன்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
பரோல் கிடைக்கப் பெற்று சசிகலா விரைவில் வெளியே வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.