எனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்

எனது ஆட்சியில் யாருடைய போன் அழைப்பையும் ஒட்டுக்கேட்கவில்லை என்றும், போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது மகாராஷ்டிரா கலாசாரம் அல்ல என்றும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்
Published on

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், “முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு மாநில சைபர் போலீஸ் பிரிவு உதவியுடன் பலரது போன் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் அழைப்புகள் அதிக அளவில் ஒட்டுக்கேட்கப் பட்டன. இதற்கு பயிற்சி எடுப்பதற்காக சில அதிகாரிகள் இஸ்ரேல் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் நம்பகத்தன்மை என்ன என்பது நாடு முழுமைக்கும் தெரியும். போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது மகாராஷ்டிரா கலாசாரம் அல்ல. ஒட்டுக் கேட்பது குறித்து எனது ஆட்சியில் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மராட்டிய மக்கள் உண்மையை அறிவார்கள்.

சிவசேனாவை சேர்ந்தவர் தான் எனது அரசில் உள்துறை மந்திரியாக இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன். இதற்காக இஸ்ரேல் செல்ல விரும்பினால், சென்று விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com