

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவசேனாவை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் கடற்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே அரசை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,’ இது மிகவும் தவறான செயல். இது ஒருவகையில் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் போன்ற சூழ்நிலை.
கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் 10 நிமிடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி மூலம் குண்டர்களின் ராஜ்ஜியத்தை உத்தவ் தேக்கரே தடுத்து நிறுத்தவேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.