

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போதுதான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் ஜுன், ஜூலை மாதங்கள் வரை நீடிக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் 20-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று இந்த வருடமும் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் மழைக்கால கூட்டத்தொடர் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றாலும், கூட்டம் நடைபெறுவது அந்த நேரத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தது’’ என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.