டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். #DelhiFlight #SmuggledGold
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
Published on

புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சண்டிகரில் இருந்து விமானம் ஒன்று வந்து நின்றது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. எனவே சற்றும் தாமதிக்காத சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த 2 பயணிகளின் பைகளில் சுமார் 3 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அந்த தங்கம் கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது.

மேலும் அந்த இருவரில் ஒருவர் தமிழகத்தையும், மற்றொருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில், கொல்கத்தா செல்ல இருந்த ஒரு பயணியிடம் மொத்தம் 6.48 கிலோ எடை கொண்ட 39 தங்க கட்டிகள் இருப்பதை சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 8 லட்சம் ஆகும். அந்த பயணி வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com