

புதுடெல்லி:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் எதுவும் செல்லாது, நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி மீட்டெடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்பது, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதற்காக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகளை சேர்ந்தவர்கள் நேற்று டெல்லி சென்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இன்று காலை சந்திக்க தேர்தல் ஆணையத்திடம் கோரி இருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி ஆதரவாளர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம், பொதுச்செயலாளர் பதவி போன்ற விவகாரங்களில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்கக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில பொறுப்பாளருமான புகழேந்தி, அதிமுக முன்னாள் எம்பி அன்பழகன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இந்த மனுவை அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி அணியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் சந்திக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.