வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்- சக்சேனாவின் விசாரணைக் காவல் மேலும் நீட்டிப்பு

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பிடிபட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவின் விசாரணைக் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்- சக்சேனாவின் விசாரணைக் காவல் மேலும் நீட்டிப்பு
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த குற்றப்பத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியரான ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி சச்சேனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

சச்சேனாவின் விசாரணைக் காவல் நிறைவடைந்ததையடுத்து, இன்று அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாலும், மேலும் தகவல்களைப் பெறவேண்டியிருப்பதாலும் சச்சேனாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், சச்சேனாவின் விசாரணைக் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தானின் விசாரணைக் காவலும் இன்று நிறைவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 15-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena #GautamKhaitan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com