டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய 28 துருக்கியர்கள் கைது

டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட துருக்கியை சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர். #DelhiAirport GoldSmuggling
டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய 28 துருக்கியர்கள் கைது
Published on

புதுடெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், துருக்கியிலிருந்து இருந்து டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தில் வந்த 23 பேர் தங்கம் கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

அவர்கள் தங்களது பெட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து தங்கத்தை கடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 15.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.4.44 கோடி இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு சோதனையின் போது தங்கம் கடத்திய துருக்கி நாட்டை சேர்ந்த 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.55.4 கோடி மதிப்பிலான 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் கடத்திவந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 28 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com