

சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அப்போது துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை என 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, மார்ச் 9-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மார்ச் 9ல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் நிறைவில், ஏப்ரல் 9-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் தனபால் வெளியிட்டார். எந்தெந்த நாட்களில் எந்த துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்பதையும் சபாநாயகர் விளக்கினார்.