

சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவங்கள் 29-1-2018 முதல் தலைமை கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. கட்சியினர் அவ்வாறு பெற்று சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்து 1-3-2018 முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இப்பணியில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான காலக்கெடுவை நீட்டித்துத்தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கட்சி தொண்டர்களின் வேண்டுகோளை பரிசீலனை செய்து, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் உறுப்பினர் பதிவை புதுப்பித்தலுக்கான காலக்கெடு 31-5-2018 வரை நீட்டிக்கப்படுகிறது.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி, கட்சி உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK