

சென்னை:
தினமும் ‘தினத்தந்தி’ படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்தி அல்லாத பிற மொழி பத்திரிகைகளில் முதல் இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்து இருக்கிறது.
தினசரி செய்தி பத்திரிகைகளை எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள்? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தும் நிறுவனம்(எம்.ஆர்.யூ.சி.) நேற்று 2017-ம் ஆண்டிற்கான ஆய்வு முடிவை வெளியிட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் மாத, வார இதழ் முடிவுகளையும் வெளியிட்டு உள்ளது.
தினசரி பத்திரிகைகள் முடிவுகளை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் அதிக வாசகர்கள் படிக்கும் முதல் 10 பத்திரிகைகளில் ‘தினத்தந்தி’ இடம் பெற்றுள்ளது.
முதல் இடத்தை ‘டைனிக் ஜக்ரான்’ என்ற இந்தி பத்திரிகையும், 2-வது இடத்தை ‘இந்துஸ்தான்’ என்ற இந்தி பத்திரிகையும், 3-வது இடத்தை ‘அமர் உஜலா’ என்ற இந்தி பத்திரிகையும், 4-வது இடத்தை ‘டைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி பத்திரிகையும் பெற்று உள்ளன. முதல் 4 இடங்களிலும் இந்தி மொழி பத்திரிகைகளே இடம் பிடித்துள்ளன.
5-வது இடத்தை ‘தினத்தந்தி’ பத்திரிகை பெற்றுள்ளது. ‘தினத்தந்தி’ பத்திரிகையை ஒரு நாளில் 2 கோடியே 31 லட்சத்து 49 ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்ற பெருமை மிகு தகவலை இந்திய பத்திரிகை படிப்போர் ஆய்வு நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் ‘தினத்தந்தி’ தனது வாசகர்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தி உள்ளது. இது இந்தி அல்லாத பிறமொழி பத்திரிகைகளில் முதல் இடம் ஆகும். இதுவரையில் அந்த இடத்தை மலையாள பத்திரிகையான ‘மலையாள மனோரமா’ தான் தக்க வைத்திருந்தது.
6-வது இடத்தை ‘லோக் மத்’ என்ற மராத்தி பத்திரிகையும், 7-வது இடத்தை ‘ராஜஸ்தான் பத்ரிகா’ என்ற ராஜஸ்தான் மொழி பத்திரிகையும், 8-வது இடத்தை மலையாள பத்திரிகையான ‘மலையாள மனோரமா’வும், 9-வது இடத்தை ‘ஈநாடு’ என்ற தெலுங்கு பத்திரிகையும், 10-வது இடத்தை ‘பிரபாத் கபார்’ என்ற இந்தி பத்திரிகையும் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து வெளி வரும் ‘தினத்தந்தி’ தவிர வேறு எந்த பத்திரிகையும் முதல் 10 இடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.