

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார். அவர் எதற்காக சென்னை அணியில் இருக்கிறார் என்று ரசிகர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.
ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஏற்றவாறு அவரது பேட்டிங் நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. டோனி ஆட்டம் இழந்த பிறகு 6-வது வீரராக களம் இறங்கிய அவர் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் தோல்விக்கு அவரது மந்தமான ஆட்டமே காரணம். அவர் இடத்தில் பிராவோவை களம் இறக்கி இருந்தால் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும்.
இந்த சொதப்பலான ஆட்டத்தால் கேதர் ஜாதவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளனர். இனிவரும் ஆட்டங்களில் அவரை சேர்க்காமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னை அணியின் பேட்டிங் வரிசை முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சிறப்பான முடிவுகளை கையாண்டார். திரிபாதியை தொடக்க வீரராக அனுப்பியதற்கு நல்ல பலன் கிடைத்தது. சுனில் நரீன் மிடில் ஓவரிலும், ரசல் கடைசி கட்டத்திலும் பந்து வீசியது அபாரமான முடிவாகும்.
இங்கிலாந்து அணியின் கேப்டனான மார்கன் எல்லா வகையிலும் தினேஷ் கார்த்திக்குக்கு உதவியாக செயல்பட்டு, வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார்.