

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.
நவாஸ் ஷெரீப்பின் இரு மகன்களான ஹஸன் மற்றும் ஹுசைன் ஆகியோர் 6 நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு குறித்து விசாரிக்கப்பட்டது. தேசிய கணக்கியல் பீரோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் முதலீடு செய்துள்ள பங்கு மதிப்புகளை முடக்க பாகிஸ்தானின் பங்குச்சந்தை கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இவ்வழக்கை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த நவாஸ் ஷெரீப்பின் இரு மகன்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.