

திஸ்பூர்:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கை மே 17ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கும்படி அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அவர் கூறி உள்ளார்.
4ம் கட்ட ஊரடங்கின்போது விதிமுறைகளை மேலும் தளர்த்தினால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடருவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. மும்பை, புனே மற்றும் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.