

பெங்களூர்:
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் 21 என மொத்தம் 22 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். அவர்கள் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 22 பேர் ஒட்டுமொத்தமாக விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜோதிராதித்யாவின் ஆதரவாளர்களாக கருதப்படும் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் மத்திய பிரதேசத்தில் இருந்து வெளியேறினர். அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி பெங்களூர் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கும், தாங்கள் வெளியே செல்லும் இடங்களிலும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.