ராஜஸ்தானில் காங்கிரஸ் முந்துகிறது - பட்டாசுகளுடன் கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் முந்துகிறது - பட்டாசுகளுடன் கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் தொண்டர்கள் குவிந்துள்ளனர். #Results2018 #RajasthanElections2018
Published on

ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. தேர்தலில் கட்சி வெற்றியடைந்த பின்னரே பாரம்பரிய தலைப்பாகையை அணிவேன் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.  வாக்கு எண்ணிக்கையில் டோங்க் தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 100 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 70 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் காலையிலேயே தொண்டர்கள் குவிந்தனர். சச்சின் பைலட் வீட்டின் முன்பாக ஏராளமான தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக முழக்கங்கள் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com