

காஷ்மீர் மாநில காங்கிரசில் மூத்த தலைவராக விளங்கி வந்தவர் குலாம் நபி படேல். இவர் நேற்று பிற்பகல் தனது 2 பாதுகாப்பு அதிகாரிகளுடன் புல்வாமா மாவட்டத்தின் முரன் சவுக் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் குலாம் நபி படேல் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மூவரும் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே குலாம் நபி படேல் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஸ்ரீநகரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.