

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்த சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.
காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.