

சென்னை:
பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா கந்து வட்டி புகார்களில் ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது 2 மகன்களும் கைதாகி இருக்கிறார்கள். 3-வது ஒரு வழக்கு போடப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பகன்சந்த் பண்டாரி என்பவர் போத்ரா மீது, புதிய புகார் ஒன்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்தார். ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அடமானம் வைத்து, ரூ.30 லட்சம் பணம் பெற்றதாகவும், ரூ.30 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும், போத்ரா தனது நகைகளை திருப்பிக்கொடுக்காமல் தன்னை மிரட்டியதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய புகார் தொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதிய 2 வழக்குகளிலும் போத்ரா கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போத்ரா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல் ஆணையர் விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.