விவசாயிகள் மானிய விலையில் விதை வெங்காயம் பெறலாம்- கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் விதை வெங்காயம் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
கலெக்டர் சாந்தா
கலெக்டர் சாந்தா
Published on

பெரம்பலூர்:

தோட்டக்கலைத்துறை மூலம் 2019-20-ம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பரப்பு அதிகரித்தல் இனத்தின் கீழ் 40 சதவீதம் மானியமாக ரூ.20 ஆயிரத்திற்கு காய்கறி விதைகள், நீரில் கரையும் உரம், உயிர் பூஞ்சாண் கொல்லி போன்றவைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தின் முதன்மை பயிரான சின்ன வெங்காயம் 6 ஆயிரத்து 95 எக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிரில் தொடர் மழையினால் நிலவிய குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காரணமாகசில பகுதிகளில் சின்ன வெங்காயப் பயிர்களில் திருகல் நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோய் பெரம்பலூர் மாவட்டத்தை தவிர்த்து திருச்சி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி மற்றும் தை பட்டத்தில் வெங்காய குமிழ்கள் பயன்படுத்தி நடவு செய்யப்பட்டுவருகிறது. மேலும் இந்நோய் தாக்குதலால் விவசாயிகளிடையே நடவு செய்வதற்கு வெங்காய குமிழ்கள் போதிய இருப்பு இல்லாதது தெரிய வருகிறது.

தோட்டக்கலைத்துறையில் விதை வெங்காயம் அனைத்து வட்டாரங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி வெங்காய விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com