

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை, தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மகாராஷ்ட்ரா மாநிலம், புனே அருகிலுள்ள முல்ஸி அணையில் குளிக்கச் சென்ற போது சுடலைஈஸ்வரன் மகன் சரவணகுமார், கலீம் அன்சாரி தானிஷ் ராஜா மற்றும் கணேஷ் மகன் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளை உடனடியாக புனே மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகளை துரிதபடுத்துமாறு உத்தரவிட்டேன்.
இந்த துயரச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.