

தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
சென்னை அடையாறு மற்றும் கூவம் நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். இதேபோல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், நீர்வள ஆதாரங்களை அதிகரிப்பதற்கும் நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் 2690 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின்மூலம் சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
கோவை வெள்ளலூரில் ரூ.178.26 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் நடப்பு நிதியாண்டில் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.