

சென்னை:
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில், 11.3.2018 அன்று கொழுக்குமலை கிராமத்திலிருயது குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்த மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில், சிக்கிக் கொண்டனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
இந்தக் கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கிணங்க மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
எனது உத்தரவின் பேரில், தற்போது மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் இருபத்தாறு நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டுத் தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய பத்து நபர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடையதவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். #tamilnews #thenifire #KuranganiForestFire #edappadipalanisamy