ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் சவாலானது,அபாயகரமானது அல்ல - ரகானே

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது. ஆனால் அபாயகரமானது அல்ல என ரகானே கூறியுள்ளார். #SAvsIND #rahane #JohannesburgTest
ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் சவாலானது,அபாயகரமானது அல்ல - ரகானே
Published on

ஜோகன்னஸ்பர்க்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 187 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன் எடுத்தது. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 247 ரன் எடுத்தது.

இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரகானே 48 ரன்னும், கேப்டன் வீராட்கோலி 41 ரன்னும் எடுத்தனர். பிலாண்டர், ரபடா, மார்கல் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

241 ரன் எடுத்தால் வெற்ற என்ற நிலையில் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்து இருந்தது. மர்கிராம் 4 ரன்னில் முகமது ‌ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். எல்கர் 11 ரன்னிலும், ஹசிம் அம்லா 2 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் குறித்து சர்ச்சை கிளம்பியது.

பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனதால் வீரர்களை தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. கோலி, விஜய் ஆகியோர் கையில் பந்து தாக்கி வலியால் அவதிப்பட்டனர்.

பும்ரா வீசிய பந்து தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் எல்கான் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் அவர் சிறிது நேரம் நிலை குலைந்தார். இதனால் 30 நிமிடத்துக்கு முன்னதாக போட்டி நிறுத்தப்பட்டது. ஜோகன்ஸ்பர்க் வான்டர்ஸ் ஆடுகளம் அபாயகரமானது என்று முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர். இதனால் இன்று போட்டி நடக்குமா? டெஸ்டை பாதியில் ரத்து செய்யப்படுமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் 3-வது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்தது.

இந்த ஆடுகளம் குறித்து இந்திய வீரர் ரகானே நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில் ஆடுவது சவாலானதுதான். ஆனால் அபாயகரமான ஆடுகளம் இல்லை. இயல்பான ஆடுகளங்களில் பந்து பவுன்ஸ் ஆவதுபோல்தான் இருந்தது. இந்த ஆடுகளத்தில் ஹசிம் அம்பலா 60 ரன் எடுத்து இருக்கும்போது பிட்ச் குறித்து யாரும் குற்றம் சாட்டக்கூடாது. இந்திய வீர்ர்களுக்கும் அடிப்பட்டது. நாங்கள் தொடர்ந்து விளையாடினோம். எங்கள் வீரர்களும் பல கடினமான பந்துகளை சந்தித்தனர். எனக்கு காலில் அடிப்பட்ட போது என்னை வந்து பார்த்து சிறிது இடைவெளிக்கு பிறகு விளையாட கூறினர்.

ஹெல்மெட்டில் பந்து பட்ட எல்கர் நல்ல நிலையில் தான் இருக்கிறார். இதனால் ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக கருதவில்லை. ஆனால் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரை ஆட்டத்தில் கவனம் செலுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த டெஸ்டை பொறுத்த வரை இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. 224 ரன்னுக்குள் தென் ஆப்பிரிக்காவின் எஞ்சிய விக்கெட்டை இந்திய வீரர்கள் கைப்பற்ற வேண்டும். #SAvsIND #rahane #JohannesburgTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com