

வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மணிப்பூரிலும் பலத்த மழை பெய்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. எனவே, அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு விரைந்து செய்யும்’’ என தெரிவித்துள்ளார்.