

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஏ.ஜி.சுனில் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசின் அரசாணை, இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்து உள்ளது. எனவே கால்நடை சந்தையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நவநீதிபிரசாத் சிங் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், “மத்திய அரசின் அரசாணையில், மாட்டிறைச்சியை விற்பதற்கோ, சமைத்து உண்ணுவதற்கோ எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மேலும், அரசியல் சட்டத்தின் விதிமுறைகளும் இதில் மீறப்படவில்லை. எனவே இந்த மனுவை கோர்ட்டு பரிசீலிக்காது” என்றார்.
இதையடுத்து மனுதாரர், தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.