கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் 9 நாட்கள் அவகாசம் கேட்கும் சி.பி.ஐ

6 நாள் விசாரணைக்காவல் முடிந்து கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 நாட்கள் அவரை விசாரிக்க அனுமதி தேவை என்ற சி.பி.ஐ.யின் கோரிக்கை மீது நீதிபதி மாலை முடிவு செய்கிறார். #KartiChidambram
கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் 9 நாட்கள் அவகாசம் கேட்கும் சி.பி.ஐ
Published on

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் 6 நாள் விசாரணைக்காவல் முடிந்து இன்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

5 நாள் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி ஒழிந்துள்ளதாகவும் சி.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தஷ்கர் மேஹ்தா வாதிட்டார். மேலும், அதிகாரிகளின் கேள்விக்கு கார்த்தி சரியான பதிலை அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அபிஷேக் சிங்வி

கைப்பற்றப்பட்டுள்ள செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்டை கூற கார்த்தி மறுக்கிறார் என தஷ்கர் மேஹ்தா குற்றம் சாட்டினார். இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் ஒரு முக்கிய ஆதாரம். ஆனால், அது மட்டும் போதாது. எனவே, கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 9 நாட்கள் கோர்ட் அவகாசம் வழங்க வேண்டும் என தஷ்கர் மேஹ்தா கோரிக்கை விடுத்தார்.

அரசுத்தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை எப்படியாவது விசாரணைக் காவலில் அடைத்திட சி.பி.ஐ முயற்சிக்கிறது. அவர் விசாரணைக்கு தயாராகவே உள்ளார். ஆனால், சி.பி.ஐ விரும்பும் வாக்குமூலத்தை கார்த்தி அளிக்கமாட்டார் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாலை 4.30 மணியளவில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க உள்ளார். வழக்கு விசாரணைக்காக ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி கோர்ட்டுக்கு இன்று வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KartiChidambram #INXMediaCase #CBI #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com