குட்கா வழக்கு - கைதான 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு

குட்கா வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GutkaScam
குட்கா வழக்கு - கைதான 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு
Published on

குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 பேரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

குட்கா ஊழலுக்கு துணை போனவர்கள் யார்-யார்? என்பது பற்றிய கூடுதல் தகவல்களை மாதவராவிடம் திரட்ட வேண்டி இருப்பதாகவும், அதற்காகவே அவரை காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் குட்கா ஊழலில் எவ்வளவு பணத்தை லஞ்சமாக பெற்றனர் என்பது பற்றி மேலும் தகவல்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தில் 2 அதிகாரிகளும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் இருவரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. போலீஸ் காவலில் இவர்களிடம் விசாரணை நடத்தும் போது குட்கா ஊழல் வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com