

சென்னை:
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 10 பேரை கைது செய்தது.
இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது.
இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு சாத்தான்குளம் செல்கிறது.