

விருதுநகர்:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவந்த நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதற்கான வாட்ஸ்-அப் ஆடியோ வெளியாகி தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இதனை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
வழக்கின் தண்மை கருதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தாணம் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். சந்தாணம் குழுவினர் கடந்த இரு நாட்களாக மதுரை காமராசல் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
நிர்மலா தேவி வீட்டை நேற்று சோதனையிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சந்தாணம் குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #TamilNews