அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வழங்கக்கோரி முறையீடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் முறையீட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது வக்கீல் ரமேஷ் என்பவர் ஆஜராகி கூறியதாவது:-

‘காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிலைக்கு 40 நாட்கள் பூஜை நடைபெற்று வருகிறது. இதை பார்க்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு செய்யவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசலில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் அப்பகுதி வாசிகள். கூட்ட நெரிசலில் 27 பேர் பலியானதாகவும், தமிழக அரசு வெறும் 4 பேர் என்று கூறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். படுத்த நிலையில் உள்ள அத்திவரதர் அடுத்த சில நாட்களில் நின்ற நிலைக்கு மாறபோகிறார். அதனால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, துணை ராணுவத்தை வரவழைத்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இது குறித்து தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்.’

இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com