அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு - தனியரசு
கோவை:
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
எதிர்கட்சிகளின் புகார் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்று நீதிமன்றங்கள் விரைவாக முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுத்ததில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. வழக்கு போடப்பட்டுள்ளது.
முதல்வர் தயங்காமல் பாரதியின் நெஞ்சுரத்துடன் வழக்குகளை சந்திக்க வேண்டும். நேர்மையாக இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
இது பின்னடைவு இல்லை. இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி விரைவில் விடுதலையாவார்.
அமைச்சர்களை அன்பாக அணுகி தனது தொகுதிக்கு தேவையான நிதியை கருணாஸ் பெற்று இருக்க வேண்டும்.
கருணாசை இந்த அரசு மென்மையாக, தோழமையுடன்தான் பார்க்கிறது. கருணாஸ் மீண்டும் எங்களுடன்இணைந்து பணியாற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #Edappadipalaniswami #Thaniyarasu #Karunas #CBI

