

இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 535 காசுகளாக இருந்த முட்டை விலை 540 காசுகளாக உயர்ந்தது.
கடந்த 6-ந்தேதி 520 காசுகளாக இருந்த முட்டையின் விலை அதன் பிறகு தினசரி 5 காசுகள் உயர்ந்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதே போல கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 95 ரூபாயாக நீடிக்கிறது. முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 120 ரூபாயாகவும் நீடிக்கிறது.