அமைந்தகரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பலி

சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.
அமைந்தகரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பலி
Published on

கோயம்பேடு:

சென்னை அமைந்தகரை கக்கன் நகரைச் சேர்ந்தவர் அன்சார். இவர், தனது தந்தை அன்வர் பாஷா, தனது சகோதரர் பரோசின் ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அன்சாரின் மகன் தயான் (வயது 8), பரோசின் மகள் முஸ்கான் (4½).

இவர்களது வீட்டின் முன்பக்க சுவரையொட்டி பெரிய மரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததால், வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது.

நேற்று மாலை தயான், அவருடைய தங்கை முஸ்கான் இருவரும் வீட்டின் முன்புறம் இருந்த மரத்தின் அருகில் தங்களது தாத்தா அன்வர் பாஷாவுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தால் மரம் அங்கும், இங்குமாக வேகமாக அசைந்தது. இதனால் ஏற்கனவே மழையில் ஊறி இருந்த வீட்டின் முன்பக்க சுவர், திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தயான், அவனுடைய தங்கை முஸ்கான் இருவர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com