நைஜீரியா, கேமரூனில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 16 பேர் பலி

நைஜீரியா மற்றும் கேமரூனில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியா, கேமரூனில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 16 பேர் பலி
Published on

மைடுகுரி:

கேமரூன் மற்றும் நைஜீரிய நாட்டின் எல்லைப்பகுதியில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்கான போரில் பன்னாட்டு ராணுவ வீரர்கள் அடங்கிய படை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், வடக்கு கேமரூனின் கொலொஃபடா பகுதியில் உள்ள கவுடேரி கிராமத்தில் சில போக்கோ ஹரம் தீவிராவதிகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 11 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது முன்னர் நடத்தப்பட்ட கைது சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியா நாட்டின் போர்னோ மாநில தலைநகரான மைடுகுரி நகரின் மத்திய பகுதியில் உள்ள அஜ்ரி யாலா பகுதியில் பிரபலமான மசூதி ஒன்றுள்ளது. நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த மசூதிக்குள் ஒரு தீவிரவாதி உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு புகுந்துள்ளான். அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென்று வெடிக்க செய்ததில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    

X

Maalai Malar
www.maalaimalar.com