

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால் 90 இடங்களை கொண்ட அரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பா.ஜனதா கடந்த தடவை 47 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாரதிய ஜனதாவால் இந்த தடவை எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
அரியானாவில் கடந்த தடவை 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் இந்த தடவை 31 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவுக்கு வலுவான சவாலை கொடுத்துள்ளது. அதுபோல தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்திய தேசிய லோக் தளம் 1, அரியானா லோக் கித் கட்சி 1 மற்றும் 7 சுயேட்சைகள் ஆகிய 9 பேர் வெற்றி பெற்றதால் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. என்றாலும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை பாரதிய ஜனதா நேற்று மதியமே தொடங்கி விட்டது.
அரியானாவில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தும் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமித்ஷாவிடம் பா.ஜனதா பாராளுமன்ற குழு ஏற்கனவே வழங்கி இருந்தது. இதனால் அரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையிலேயே சுயேட்சைகளை கைப்பற்ற அமித்ஷா உத்தரவிட்டார். அதோடு அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரையும் டெல்லிக்கு அழைத்து சில யோசனைகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரியானாவில் வெற்றி பெற்றுள்ள 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் லோக் தளம், அரியானா லோக்கித் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என 9 எம்.எல்ஏ.க்களின் ஆதரவை திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டது. பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்கள் குழுக்களாக பிரிந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தங்கள் பக்கம் இழுத்தனர்.
பா.ஜனதா தலைவர்களின் பேச்சுவார்த்தையால் கட்டார் தலைமையில் ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நயன்பால் ரவத், ரஞ்சித்சிங், சோம்வீர் சங்வான், பால்ராஜ் குண்டு ஆகிய 4 பேரும் உடனடியாக சம்மதித்தனர். இவர்கள் 4 பேரும் பாரதிய ஜனதாவில் இருந்தவர்கள். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் இந்த 4 பேரையும் தங்கள் பக்கம் வளைப்பதற்கு பா.ஜ.க. தலைவர்களால் மிக எளிதாகி விட்டது. அதுபோல மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராகேஷ் தவுதாபாத் என்பவரையும் பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இந்த 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் நேற்று உடனடியாக விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே தேவிலாலின் இளைய மகனும், லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரஞ்சித்சிங்கிடமும் பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அதுபோல அரியானா லோக்கித் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கோபால் கண்ட் என்பவரிடமும் பா.ஜக. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அவர்கள் இருவரும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அவர்களை சிர்சா பாராளுமன்ற எம்.பி. சுனிதா தனி விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ரஞ்சித்சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். காங்கிரஸ் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்ல விரும்பாத அவர் உடனடியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மனோகர்லால் கட்டார் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பாக அமித்ஷாவும், கட்டாரும் இன்று காலை நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இன்று பிற்பகல் கட்டார் டெல்லியில் இருந்து அரியானா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அப்போது அவர் தன்னை ஆதரிக்கும் 47 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் ஒப்படைப்பார்.
அதை ஏற்று கட்டாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார். அதன் படி கட்டார் தலைமையில் பாரதிய ஜனதாவின் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரியானாவில் இன்று காங்கிரஸ் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தனித்தனியாக நடக்கிறது. அதில் சில புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.