2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது - தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

அகில இந்திய அளவில் நடைபெறும் 48 மணிநேர வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh #Centretradeunions
2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது - தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை
Published on

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

ஆனால் இன்று காலை அதுபோன்று எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த போராட்டத்துக்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் ஆட்டோக்களும் ஓடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து எப்போதும் போல முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து வழித்தடங்களுக்கும் எந்தவித தடங்கலும் இன்றி பஸ்கள் இயக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 95 சதவீத பஸ்கள் ஓடின.

இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பஸ் நிலையங்கள், பஸ் டெப்போக்கள் முன்பு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

பஸ் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து பல்லவன் இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வங்கி ஊழியர்களும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலைகள் தமிழக வங்கிகளில் முடங்கியுள்ளது.

இதனால் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இருப்பினும். ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல செயல்பட்டன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறைகளில் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தால் சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் போன்ற இடங்களில் செயல்படும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஏ.ஜி.ஆபீஸ், மத்திய கணக்கு தணிக்கை துறை அலுவலகம், சுங்க வரி மற்றும் கலால் வரி அலுவலகங்களிலும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com